Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மதுரை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, மதுரையில் கடந்த 2 தினங்களாக நள்ளிரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகர் பகுதிகளை பொறுத்தமட்டில், பெரியார் பஸ் நிலைய பகுதிகள், எல்லீஸ் நகர், ரெயில் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. தொடர்மழை காரணமாக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வைகை, பெரியாறு அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், மதுரை, மாட்டுத்தாவணி அருகே உள்ள டி.எம்.நகரில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. முட்டி அளவிற்கு தேங்கிய மழைநீரில் மக்கள் நடந்து செல்கின்றனர். மேலும் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதால், குடியிருப்புவாசிகள் பெரும் அவதி அடைந்துள்ளனர். மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.